ஒரு வழியாக தீர்ந்த இம்சை அரசன் பிரச்சனை: வந்துட்டார்யா வடிவேலு திரும்பி வந்துட்டார்யா

 இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹைலைட்ஸ்:

  • இம்சை அரசன் 24ம் புலிகேசி பிரச்சனை தீர்ந்தது
  • மீண்டும் படங்களில் நடிக்கும் வடிவேலு
சிம்புதேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்து வந்த படம் இம்சை அரசன் 24ம் புலிகேசி. படப்பிடிப்பு துவங்கிய 10 நாளில் வடிவேலு மற்றும் சிம்புதேவன் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது ஷங்கர் புகார் அளித்தார். இம்சை அரசன் பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
அவரால் எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் அண்மையில் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முயற்சி செய்தும் பலனில்லை.
இந்நிலையில் இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனை தீர்ந்துவிட்டதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ். பிக்சர்ஸ் ஷங்கர் அவர்கள், '23-ம் புலிகேசி 2' திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.
மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
லைகா நிறுவன தயாரிப்பில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதனால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வந்த இந்தியன் 2 படம் கிடப்பில் இருக்கிறது. அந்த படத்தை ஷங்கர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments